29.12.09

மரணம் வருமுன் தொழு!

ஐநேரத் தொழுகை
அனுதினமும்
கடமை என்றேன்-நீ
ஆகாரம் தேடுவதிலேயே
ஆர்வமாய் இருந்தாய்.

உனக்குத் தொழுகை
நடத்துமுன்-நீ
தொழுதுகொள் என்றேன்.
தொழில்செய்யவே
தொடர்ந்து நீ முயன்றாய்.

மரணம் வரும்வரை
மட்டில்லா ஆசைகள்-உன்
இறைவன் நினைவைவிட்டு
அகற்றிவிட வேண்டா என்றேன்.
காதில் வாங்காமல்
கவனமற்று இருந்தாய்!

ஆறிலும்
அழிவு வரலாம்.
நூறிலும்
அழிவு வரலாம்.
ஆகவே அல்லாஹ்வை
ஆர்வமாய்த்தொழுதுகொள்!”
என்றேன்.

நீயோ
வீண்பேச்சு, கேளிக்கை
அரட்டையில் நாள்தோறும்-உன்
நாட்களைக் கழித்தாய்!

தொழு! தொழு! என்று
தொடர்ந்து நான்
சொன்னபோதும்
தொழாத நீயோ
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத்
தொடர்ந்து இரசிப்பதிலே
காலத்தைத் தொலைத்தாய்!

 இதோ-உன்
உயிரைப் பறிக்கின்ற
வானவர் வந்துவிட்டாரே
இப்போது நீ
என்ன செய்யப்போகிறாய்?