21.10.09






















மீண்டும் நரகாசுரன்


நேற்று
மீண்டும் வந்தான்
நரகாசுரன்.

ஆண்டு முழுவதும்
அரும்பாடுபட்டுச்
சம்பாதித்த பணத்தையெல்லாம்
வெடியாகக் கொளுத்திக்
கரித்தான்
புகைத்தான்.

கூரை வேய்ந்திருந்த அந்த
ஏழை வீட்டின்
ஓலைக் குடிசையையும்
வெடியால் கொளுத்திச்
சாம்பலாக்கினான்.

வெடி எனும்
ஆயுதம் கொண்டு
பலரைக் காயப்படுத்தினான்.
சிலரைக் கொன்றான்.

மற்றோரெல்லாம்
சீக்கிரம் இறந்திடவே
புகையால்
சுற்றுச்சூழலை
நாசப்படுத்தி
மரணவலை விரித்தான்.

வீதிகளையெல்லாம்
குப்பைகளாக்கித்
தோட்டிகளுக்கு
வேலை கொடுத்தான்.

கடும் சப்தவெடிகளை
இரவில் வெடித்து
எங்களின்
இரவுத் தூக்கத்தைக்
கெடுத்தான்-அவன்
மகிழ்ந்தான்.

மீண்டும்
அடுத்த ஆண்டு
வருவேன்-என
எச்சரித்துச் சென்றான்.