7.8.09

ஏன்...ஏன்...ஏன்?


பெற்றெடுத்த பெண் மகளைக்
குப்பைத் தொட்டியில்
வீசியெறிந்திடும்
நெஞ்சமற்ற வஞ்சியே
உனக்கேன் இல்லற சுகம்?

ஈன்ற குழந்தைக்குத்
தாய்ப்பாலூட்டி வளர்க்காமல்
புட்டிப்பாலை ஊட்டிடும்
குற்றறிவு கொண்ட நங்கையே
உனக்கேன் இரு கொங்கையே?

பச்சிளங்குழந்தையின்
மழலைமொழி கேட்டு
மகிழ்ந்திடும்
இன்பமறியாமல்
குழந்தைக் காப்பகத்தில்
விட்டுச்செல்லும் அன்னையே
உனக்கேன் குழந்தையே?
உனக்கேன்
அன்னை எனும் பதவியே?

குழந்தையின்
அழுகுரல்கேட்டு
அமுதூட்டிடாமல்
இசையை
இரசித்துக்கொண்டிருக்கிற
இளையவளே!
நீ
இசை மழையில்
நனைகின்றபோது
உன் குழந்தை
கண்ணீர் மழையில்
நனைவதை அறியாயோ?

பெற்றெடுத்த குழந்தையைப்
பெற்றுடன் வளர்க்கக்
கற்றிடாத காரிகையே
உனக்கேன்
கட்டில் சுகம்?

கலிகாலமாதலால்
கல்நெஞ்ச அன்னையர்
மிகுந்துவிட்டனரா?
கணினியுகமாகிவிட்டதால்
தாய்ப்பாசமும்
கரைந்துவிட்டதா?