22.1.10

பணமே வருகை தருவாயா?


 

நீ
செல்வந்தர்களோடுதானே
உறவு வைத்துக்கொள்கிறாய்!
அவர்களைத்தானே
அன்றாடம் நீ
தேடிச் செல்கிறாய்!

ஏழைகள் எங்களின்
வீட்டுக்கு
வருகை தந்து-எம்
வறுமையைப்
போக்கமாட்டாயா?

நீயும்
கேடுகெட்ட மானிடரைப்
போன்றுதானோ?
அவர்கள்தாம்
வசதியுடையோருடனே
ஒட்டிக்கொள்வர்.
வசதியற்றோரை
வெட்டிக்கொள்வர்.

நீ
செல்வந்தர்களின்
இல்லங்களில்
சோம்பேறியாய்த்
துயில்கொள்வதைவிட
ஏழைகள் எங்களின்
குடிசைகளுக்கு
வருகை தந்து-எங்களின்
வயிறுகள் நிரப்பலாமே!

நீ ஏன்
செல்வந்தர்களின்
பெட்டிகளுக்குள்
சிறைபட்டுக் கிடக்கின்றாய்?

எங்களின்
இல்லங்களுக்கு-நீ
வருகை தந்தால்
நாங்கள் உனைச்
சுதந்திரமாகத்
திரியவிடுவோமே!

செல்வந்தர் வீட்டில்
சிறைபட்டுக் கிடப்பதே
உன் விருப்பமா?
ஏழைகள் எங்களின்
இல்லங்களுக்கு
வருகை தந்து
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கமாட்டாயா?

 ஏழை வீட்டுக்கு
வருகை தந்து-எங்கள்
குழந்தைகளின்
பசிபோக்க மாட்டாயா?

எங்கள் பிள்ளைகளின்
உயர்படிப்புக்கு
உதவிசெய்ய மாட்டாயா?

இங்கே
வெம்பி வாடும்-முதிர் 
கன்னிப் பெண்டிரின்
திருமணத்தை
நடத்தி வைக்கமாட்டாயா?

தினம் தினம்
துன்பத்தில் துவளும்-எங்கள்
துயரத்தைக் களைந்திட-எம்
இல்லங்களுக்கு-நீ
என்றுதான்
வருகை தருவாயோ?

உன்
வரவுக்காகக்
காத்திருக்கும்
பரம ஏழை..

21.1.10

பணமே! பணமே!

அருளில்லார்க்கு
அவ்வுலகில்லை
 பொருளில்லார்க்கு
இவ்வுலகில்லை-எனும்
நன்மொழி படித்து
உன்னை நேசித்தேன்.

அல்லும் பகலும்
அயராதுழைத்தேன்.
அவனியில் வாழ்ந்திட
அயராதுழைத்தேன்.

உனைத்தேடித் தேடி-என்
உறவுகளை மறந்தேன்.
உனைத்தேடி அடைந்திட
பல்லிடம் அலைந்தேன்.

படைத்தோன் விதித்த
தடைகளை மீறி-உனை
ஈட்டிச் சேர்த்தேன்.
வட்டியில் ஈட்டிய
மொத்தப் பணத்தையும்
பெட்டியில் வைத்தே
பூட்டினை இட்டேன்.

உன் மூலம்-நான்
நிம்மதி பெறவே
உனைத் தேடி உலகினில்
நாள்தோறும் அலைந்தேன்.
அயல்நாடு சென்று
அயராதுழைத்தேன்.
உவர்நீர் சிந்தி
உற்சாகமாய் உழைத்தேன்.

உற்ற மனைவியை
பெற்ற பிள்ளைகளை
பற்றின்றி துறந்தேன்.

ஆனால்
நீ வந்த பின்பே
நிம்மதியிழந்தேன்.
நித்தமும் கட்டிலில்
நித்திரை இழந்தேன்.

உனை அடைந்திடவே
இத்தரணியில்
எத்தனை குற்றங்கள்!
எத்தனை கொலைகள்!

பணம் பாதாளம்வரை
பாயும்.
பணம் பத்தும்
செய்யும்.
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே.
உனக்குத்தான்
எத்தனையெத்தனை
பழமொழிகள்!

உனை அடைந்திடத்தானே-ஒரு
வஞ்சியவள்
வேசியானாள்.

உனைப்
பெற்றிடத்தானே
பெற்றவளையே-ஒரு
தனயன் கொன்றான்.

உனைப் பெற்றிடத்தானே
உடன்பிறந்தானின்
உயிரையே பறித்தான்.

உனை அடைந்திடத்தானே-பல
தடைகளை மீறி-பிறர்
உடைமைகளைக்
களவு செய்தான்.

உனைப் பெற்றிடத்தான்
எத்தனையெத்தனை
குறுக்கு வழிகளை
குறுமதி மானிடன்
கைக்கொள்கிறான்.

பெருவாரியாக-உனைப்
பெற்றிட எண்ணி
கள்ளத்தனமாய்
கள்ள நோட்டடித்தான்.
இன்று-அவன்
சிறையறைக்குள்
சிக்குண்டு தவிக்கிறான்

15.1.10

காலம் செப்புகிறது



 மனிதா!
காலம் கெட்டுவிட்டது-என
என்னைத் திட்டாதே!
உன்னை நீயே திட்டிக்கொள்!

காலம் என்றும் கெடுவதில்லை
காலத்தில் வாழும்
மானிடனே கெட்டுவிட்டான்.

இஸ்லாம்
மூடப்பழக்கத்தை
ஒழித்த பின்பும்-நீ
அதிலேயே
மூழ்கிக் கிடப்பதேன்?
விஞ்ஞான உலகிற்கு-நீ
வருகை தரமாட்டாயா?

நல்ல நேரம்
கெட்ட நேரம்-என
என்னில் பிரிவினையை உண்டாக்கிய        
குறுமதி மனிதா!
அறிவுலகம் வா! வா!

ஆரூடம் பார்த்து
ஆராய்ச்சி பல செய்து
நல்ல நேரமதைத்
தேர்ந்தெடுத்து மணமுடித்த
நீ மட்டும்
நிம்மதியாய் வாழ்கிறாயா?

கைரேகை பார்க்காமல்
பஞ்சாங்கத்தை நம்பாமல்
மணமுடித்த நல்லோர்களும்
இறைநம்பிக்கையாளர்களும்
இன்பமாய் வாழவில்லையா?

இன்பமும் துன்பமும்
இறைவிதிப்படி நடக்குமடா!

காலத்தைத் திட்டுவதால்
கண்ணியந்தான் கிடைத்திடுமா?
காலத்தை வெறுப்பதனால்
கவலைகள்தாம் நீங்கிடுமா?

கணினி யுகத்திலும்
கண்மூடித்தனமாக
அறியாமையில் உழலும் உன்
அறியாமையை என்னென்பேன்!

வினை செய்யச் சென்றபோது
பூனை குறுக்கே சென்றதினால்
வீணாகிப் போய்விடுமோ-உன்
வினையும் அன்றைக்கு?

விஞ்ஞானம் வளர்ந்ததினால்
மெஞ்ஞானம் குறைந்ததுவோ?
பட்சிகளின் ஆரூடம்
மெதுவாகக் கரையேறி
கம்ப்யூட்டர் ஆரூடம்
கச்சிதமாய்த் தொடர்கிறதே!
இன்டர்நெட் காலத்திலும்
அறிவிலிகள் எத்தனைபேர்!

விண்கலம் தயாரித்து
விண்ணுக்கு அனுப்புமுன்னே
மண்ணதிரத் தேங்காயுடைத்து
கண்மூடி பூசைசெய்து
விஞ்ஞானிகளுக்கே
விஞ்ஞானம் சொல்லும்
வித்தகர்கள் நாட்டிலுண்டு.

நேரம் என்பதெல்லாம்
காலத்தை அறிவதற்கே!
நாட்கள் என்பதெல்லாம்
இரவு பகல் அறிவதற்கே!
மாதங்கள் என்பதெல்லாம்
ஆண்டினை அறிவதற்கே!

ஸஃபர் எனும்
இரண்டாம் மாதம்
பீடையென அழைக்காதீர்!
மூடப்பழக்கங்களில்
மூழ்கிக் கிடக்காதீர்!
மூடப்பழக்கங்களை
முதுகிற்குப் பின்னெறிந்துவிட்டு
முறையான இஸ்லாத்தில்
முழுமையாக நுழைந்திடுவீர்!