22.10.11

மணமகளுக்கு அறிவுரை

மணமகளுக்கு அறிவுரை கூறுவதுபோல் நான் எழுதிய மணவாழ்த்து மடலிது.


பல்லாண்டுகள் காத்திருந்து-உன்
புன்னகை முகம் காணவே
இன்று உனைத் தேடி வரும்
உன் வாழ்க்கைத் துணைவரை
உன் உதட்டோரப் புன்னகையால்
அன்பாக வரவேற்று மகிழ்வாய்!

இன்பமும் துன்பமும்
ஒன்றன்பின் ஒன்றாக
ஓயாது வந்தாலும்-உன்
உதட்டோரப் புன்னகையே
உன்னவரின் உள்ளத்திற்கு
நன்மருந்தாகட்டும்!

ஆழியில் ஓயாத
அலைகளைப் போல்
நாள்தோறும் வீசிடும்
தென்றலைப்போல்
ஓயாது ஓடிடும்
காலத்தைப்போல்
தடையின்றிப் பாய்ந்தோடும்
நதியினைப் போல்-உம்
இனிய இல்லறத்தில்
இன்பமே நிலைக்கட்டும்!

விண்ணை நீங்கா
மதியைப்போல்
கண்ணை நீங்கா
இமையைப்போல்
கைவிட்டு நீங்கா
ரேகையைப்போல்-உன்
இனிய துணைவரை
நீங்காது வாழ்ந்திடுவாய்!

பூந்தோட்ட மலர்கள்-நாளும்
பூத்துக் குலுங்கிக்
காண்போர் உள்ளத்தைக்
கொள்ளை கொள்வதுபோல்-உன்
செவ்வாய் இதழ்விரித்துச்
சிரித்திடும் சிரிப்பாலே-உன்
துணைவரைக் கவர்ந்து
இல்லறத்தைத் தொடர்வாய்!

செடியில் பூத்த மலர்கள்
வாடிவிட்ட போதிலும்
மறுநாள் பூப்பதைப் போல்
உனை ஒரு துன்பம்
தொட்டுவிட்ட போதிலும்
வாடி வதங்கித் தளர்ந்திடாமல்
நித்தமும் நீ பூப்பாய்!
புகுந்த குடும்பத்திற்குப்
பெருமை பல சேர்ப்பாய்!

வண்ண வண்ணப் பூக்கள்
சோலைக்குப் பெருமை
மின்னும் விண்மீன்கள்
வானுக்குப் பெருமை
துள்ளும் மீன்கள்
ஆழிக்குப் பெருமை
வளமான பயிர்களே
வயலுக்குப் பெருமை
நல்ல மழலைகளே
தாய்மைக்குப் பெருமை!

மதிநுட்ப மழலைகள்
நனிசிறக்கப் பெற்று
குறைவற்ற செல்வத்தை
நிறைவாகப் பெற்று
இனிய இல்வாழ்வை
இன்புற்றுக் களித்திடுவாய்!
இன்றுபோல் என்றென்றும்
இன்பமாய் வாழ்ந்திடுவாய்!

இறையோனின் வார்த்தைகளை
இதயத்தில் ஏற்று
இறைத்தூதர் வாழ்க்கைதனை
இனிமையாய்க்கொண்டு
இகத்தினில் என்றென்றும்
இதமாய் நீவிர்
இன்புற்று வாழ்ந்திட
இனிதே வாழ்த்துகிறோம்!

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி 
குடும்பத்தினர்