29.12.09

மரணம் வருமுன் தொழு!

ஐநேரத் தொழுகை
அனுதினமும்
கடமை என்றேன்-நீ
ஆகாரம் தேடுவதிலேயே
ஆர்வமாய் இருந்தாய்.

உனக்குத் தொழுகை
நடத்துமுன்-நீ
தொழுதுகொள் என்றேன்.
தொழில்செய்யவே
தொடர்ந்து நீ முயன்றாய்.

மரணம் வரும்வரை
மட்டில்லா ஆசைகள்-உன்
இறைவன் நினைவைவிட்டு
அகற்றிவிட வேண்டா என்றேன்.
காதில் வாங்காமல்
கவனமற்று இருந்தாய்!

ஆறிலும்
அழிவு வரலாம்.
நூறிலும்
அழிவு வரலாம்.
ஆகவே அல்லாஹ்வை
ஆர்வமாய்த்தொழுதுகொள்!”
என்றேன்.

நீயோ
வீண்பேச்சு, கேளிக்கை
அரட்டையில் நாள்தோறும்-உன்
நாட்களைக் கழித்தாய்!

தொழு! தொழு! என்று
தொடர்ந்து நான்
சொன்னபோதும்
தொழாத நீயோ
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத்
தொடர்ந்து இரசிப்பதிலே
காலத்தைத் தொலைத்தாய்!

 இதோ-உன்
உயிரைப் பறிக்கின்ற
வானவர் வந்துவிட்டாரே
இப்போது நீ
என்ன செய்யப்போகிறாய்?

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு...

சின்னச்சின்ன விடயத்திற் கெல்லாம் தினமும்
சின்னப்பெண் போல்நீ சிணுங்காதே!-உன்
சிரிப்பை மறந்து சிறிது நேரம்-சுடும்
நெருப்பாய் நீயும் மாறாதே!

இருக்கும் நேரத்தை மகிழ்வாய்க் கழித்து
ஒருவருக் கொருவர் அன்பினைப் பகிர்ந்து
இன்ப நுகர்ச்சி கொள்வதே- இனிய
இல்லற வாழ்க்கை யாம்!

பெண்-ஆண் உரிமையில் சமமே யாயினும்
பெண்ணைவிட ஆண் ஒருபடி மேலேயாம்.
நுண்ணிய மொழிசொல்லும் திருமறையின்
உண்மைக் கூற்றினை உணராயோ?

ஆகாரம்தேடி உனைக் காக்க நாளும்
ஆண்மகன் வெளியில் செல்வானே-அவன்
ஆயிரமா யிரம்பிரச் சினையுடனே-தன்
ஆருயிர் மனைவிதேடி வருவானே.

இல்லம் நுழைந்ததும் எங்கே, ஏன் எனும்
பொல்லாக் கேள்வியைக் கேட்காதே!-அவனுக்கு
தொல்லைகள் தந்து துன்பமிழைத்து-நீ
அல்லல் பட்டு வாழாதே!

அண்டை  வீட்டுப் பெண்டிரோடு-வீண்
சண்டை ஏதும் போடாதே!-அவரோடு
தேவையற்ற பேச்சு வார்த்தையில்-காலமதை
பாவையேநீ வீண் செய்யாதே!

மாமியாரே உன் அன்னை யாவார்
மாமனாரே உன் தந்தை யாவார்.
மாசற்ற மனதுடனே பணிவிடைகள் செய்துநீ
மாநிலத்தில் மகிழ்ச்சியாய் வாழ்வாயே!

செய்யும்செயலைச் சிறப்பாய் செம்மையாய்
செவ்வனே செய்திடப் பழகிக்கொள்-நீ
பொய்யான, நிலையற்ற தரணி யதில்
மெய்யான வாழ்க்கை வாழ்வாயே!

நடப்பவை யாவும் இறைவன் விதிப்படி
நலிந்து சோர்ந்து போகாதே!-இனி
நடப்பவை யாவும் நலவாய் நடக்கும்-இறை
நம்பிக்கை நாளும் துறவாதே!

நாயன் உனக்கு நலவாய் எழுதிட்ட
நன்மை யாவும் கிடைத்துவிடும்-ஏக
நாயன் அருளுடன் நானிலத்தில் நாளும்
நன்றாய் நலமாய் வாழ்வாயே!
………………………………………………………………………

25.12.09

பாவையர் பலவிதம்

பெண்களைப் புவிப்பரப்பில் இறைவா! படைத்தாய்.
ஆண்களை அவர்கள்பின் அலைக்கழிக்க வைத்தாய்.
அணங்குகளின் அழகினை மேனியிலாக்கி-அவர்களின்
குணங்களை உள்ளுக்குள் மறைத்தாய்!

ஓராயிரம் பெண்டிரைக் கண்டிட்ட போதும்
குணமிக்க மங்கை எவளென்று நானும்
தினம்தினம் பற்பல முகங்களைக் கண்டு
திராணி இழந்தேன் அவர்களுள் பலவிதம் உண்டு.

பேராசை கொண்ட பேதைகளும் உண்டு
பொருளாசை கொண்ட பெதும்பைகளும் உண்டு.
பொன்னாசை கொண்ட பெண்டுகளும் உண்டு.
பொறுமைமிகு பூவையர் சிலரும் உண்டு.

நற்குணமிக்க ஏழை நங்கையரும் உண்டு.
துர்க்குணம் கொண்ட சீமாட்டிகளும் உண்டு.
இன்பத்தை அள்ளிவரும் இனியவளும் உண்டு.
துன்பத்தைக் கொண்டுவரும் காரிகையும் உண்டு.

கர்வமிக்க கன்னிகள் பலரும் உண்டு.
காதல்மிக்க காமுகிகள் சிலரும் உண்டு.
பார்த்தால் பசிதீரும் பத்தினியும் உண்டு.
பார்த்தால் சுட்டெரிக்கும் பாதகியும் உண்டு.

பூர்வமான சிலபல அணங்குகளும் உண்டு.
அகந்தைமிக்க மடந்தைகளும் அவர்களுள் உண்டு.
அன்புசால், அழகுடைய மாதர்களும் உண்டு.
இன்னும் பலவித அணங்குகளும் உண்டு.

யாரை நான் தேர்ந்தெடுப்பேன் புவியினில் நின்று
புரியாத புதிராக உன் படைப்பினமும் இன்று.
முப்போதும் இசைந்துவரும் முகமுடையாள் தேடி
எப்போதும் அலைந்தேன் தெருக்களும் கோடி.

மெய்யான மங்கை எவளெனக் கண்டு
துய்யகுணமும் மார்க்கப் பேணுதலும் மிகுந்த
துய்யவளை இன்று என் துணைவியாக்கிக்கொண்டு
மெய்யான நபிவாழ்வை இனிதே தொடங்கிவிட்டேன்!

24.12.09

ஓரணியில் இணைவோம்!

மனிதா!
நீ ஒன்றுபட்டால்தான்
மக்கள் ஒன்றுபடுவார்கள்.
சிதறுண்ட சமுதாயம்
எழுச்சி பெற்றதாய்
சரித்திரம் இல்லை.

"தனிமரம் தோப்பாகாது" 
"ஒரு கையில் ஓசை வராது"
ஒன்றுபட்டால்தான்
உயர்வடைய முடியும்.
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"
இதை நீ உணர்வாய்! 

பிரிந்து கிடக்கும் நார்கள்
ஒன்று சேர்வதால்தான்
உறுதிமிக்க கயிறு
உருப்பெறுகிறது.
சிதறிக் கிடக்கும்
பஞ்சு நூ ற்கள் 
ஒன்று சேர்வதால்தான் 
அழகிய ஆடையாகிறது.

பலர் ஒன்றுபட்டால்தான்
கூட்டமாகும்.
உறுப்பினர்கள் பலர்
ஒன்றிணைந்தால்தான்
குழுவாகும்.
அறிஞர்கள் பலர்
ஒன்றுகூடினால்தான்
அவை" யாகும்.

 நாம் சிதறுண்டு
பலமிழந்து கிடந்ததால்தான்
பழங்காலப் பள்ளியை
இழந்து நிற்கிறோம் !

நாம் ஒற்றுமையற்று
வேற்றுமைப்பட்டுக்
கிடப்பதால்தான்
எத்தனையோ அப்பாவி 
முஸ்லிம்களின் உயிர்களை
இழந்து நிற்கிறோம் .

இவ்வளவு காலம்
பிரிந்துகிடந்தது போதும்!
இனியாகிலும் இணைவோம்
ஓரணியில்.

"நீ தனித்தவனாக ஆகிவிடாதே!
அவனோடுதான் ஷைத்தான்
நட்பு கொள்கிறான்”-என்பது
நபிமொழி. 

நபிமொழியை ஏற்று
அதை நீ பின்பற்று!
ஒற்றுமை எனும் கயிறை
இறுக நீ பற்று!
(04-08-2000) 05-05-1421 அன்று மறுமலர்ச்சி வார இதழில் வெளிவந்த கவிதை

23.12.09

மனிதா விழித்தெழு!

மனிதா!
பொழுது விடிந்துவிட்டது-இன்னும்
உன் உறக்கம் கலையவில்லையா?
உனைப் படைத்தவனை
வணங்கச் செல்லவில்லையா?

அழியப்போகும் அகிலத்தில்
அல்லாஹ்வை நினைக்காமல்
எத்தனை காலந்தான்-நீ
உறங்கிக்கொண்டிருப்பாய்?
எத்தனை காலம்தான்
இந்த உறக்கத்தில்-நீ
சுகம் காணப்போகிறாய்?

பகல் வந்துவிட்டது
இன்னும் நீ
படைத்ததவனை
வணங்கச் செல்லவில்லையா?
படுத்திருந்த உன்னை
விழிக்கச் செய்து பொருள்தேட
ஆற்றல் கொடுத்தவனை
எப்போதுதான்
நீ வணங்கப்போகிறாய்?

இனிய மாலைப்பொழுதும்
வந்துவிட்டது-இன்னும்
உனக்கு இறைவனைப் பற்றிய
எண்ணமில்லையா?

காலை முதல் மாலை வரை
உடலாரோக்கியம் கொடுத்து
உழைக்க வைத்தவன்-உன்
இறைவனல்லவா?
அவனை வணங்காமல்
எப்படி நீ உழைப்பாய்?

அந்தி முடிந்து இரவின்
தொடக்கமும் வந்துவிட்டது.
இன்னும் நீ இறைவனை
வணங்கவில்லையா?
இன்னும்-உன்
இதயம் இளகவில்லையா?
இன்று தொழாவிட்டால்
என்றுதான் நீ
தொழப்போகிறாய்?

இதோ
இரவின் கடைசிப் பகுதியும்
வந்துவிட்டது.
இன்னும் நீ
இறைவனை வணங்கவில்லையா?

உழைப்பதற்கு
ஊக்கம் கொடுத்து
அல்லும் பகலும்
அயராது உழைக்க
ஆற்றல் கொடுத்து
அன்பான மனைவி மக்களையும்
கொடுத்த இறைவனை
இன்னும் நீ வணங்கவில்லையா?

அழியப்போகும் அவனியில்
அயராது உழைத்து
என்ன சாதிக்கப்போகிறாய்?
இறைவனின் உதவியின்றி
இவ்வுலகில் நீ
என்ன செய்திட முடியும்?
எண்ணிப் பார்த்தாயா?

நம்மைப் படைத்த ஓரிறைவன்-நம்
நரம்புகளை இழுத்துவிட்டால்
நம்மால் என்ன செய்ய முடியும்?
எப்படி உழைக்க முடியும்?

விழித்தெழு மனிதா! விழித்தெழு!-உன்
உறக்கத்திலிருந்து விழித்தெழு!
படைத்த இறைவனை
பயபக்தியோடு
அனுதினமும் நீ தொழு!
அவனிடமே நீயழு!

20.12.09

சுயநலவாதி

'வரதட்சிணை ஏதுமின்றி
மஹர்கொடுத்து உன்னை
மணமுடிப்பேன்' என்றான்.
'இஸ்லாமிய ஷரீஅத்தைப்
பின்பற்றுகிறான்' என்றேன்.

'திருமணத்தில்
சடங்கு சம்பிரதாயங்கள்
வேண்டாம்' என்றான்.
'நபிவழிப்படி
நடக்கின்றான்' என்றேன்.

'செலவுகள் குறைந்த
திருமணமே
திருநபிவழி' என்றான்.
உள்ளம் குளிர்ந்து
உவகை கொண்டேன்.

இரகசியமாய் என் மாமி
சில நகைகளைக்
கேட்டபோது-அவரைத்
தடுத்து நிறுத்தினான்.
'கொண்ட கொள்கையில்
உறுதியானவன்' என்றேன்.

'எட்டாம் மாதத்தில்
வளைகாப்பு,
சடங்குகள்
வேண்டாம்' என்றான்.
'இவனல்லோ ஆண்மகன்!'
வியப்பாய் வியந்தேன்.

குழந்தை பிறந்ததும்
அகீகா கொடுத்தான்.
'நபிவழிமுறையை
நடைமுறைப்படுத்திவிட்டான்'
என்றேன்.

பின்னொரு நாளில்
இஸ்லாமிய முறைப்படி
இரண்டாம் திருமணம்
இனிதே செய்திட
ஏற்பாடு செய்தான்.

செய்தியறிந்த நான்
கொதித்தெழுந்தேன்-அவனைக்
குதறிடப் பாய்ந்தேன்-அதை
நிறுத்தும்வரை
நில்லாமல் போராடினேன்!

14.12.09

பச்சிளங்குழந்தை

பச்சிளங்குழந்தையின்
மழலைமொழிகேட்டு
மனம் மகிழும்
மாதா எங்கே?

தொட்டிலில் இட்டு
ஆரிரோ பாடி
தாலாட்டி உறங்கவைக்கும்
அன்புசால் அன்னை எங்கே?

குழந்தையின் பசியறிந்து
தாய்ப்பாலூட்டி
சீராட்டி வளர்க்கும்
உண்மைத்தாய் எங்கே?

பச்சிளங்குழந்தையின்
மழலைச் சொல்கேட்டு
பேசக் கற்றுத்தரும்
பாசமிகு அன்னை எங்கே?

இது
கணினி யுகமாகிவிட்டதால்
தாய்ப்பாசமும்
காணாமல் போய்விட்டதோ?

விஞ்ஞானக் காலத்தில்
மெய்யான தாயரெல்லாம்
பொய்யாகிவிட்டனரோ?
பாசமெல்லாம்
வேசமாகிவிட்டதோ?

வினாத் தொடுக்கின்றது
அன்னையின் அன்பையும்
அரவணைப்பையும் இழந்து
புட்டிப்பாலைப் பருகி
குழந்தைக் காப்பகத்தில்
வளர்கின்ற
பச்சிளங்குழந்தை.

3.12.09