14.11.09

இறைக்காதலர்கள்



நிலையற்ற உலகமதில்
காணுகின்ற காட்சியெல்லாம்
மலைக்க வைத்திடினும்
மனதைக் கவர்ந்திடினும்
மலையருகே அமைந்துள்ள
மக்கா மாநகரின்
'அபா ஆலயத்தை
அலை போன்ற கூட்டத்தினர்
வலம் வருகின்ற-அக்
காட்சிக்கு நிகருண்டோ?

ஆவாரம்பூ தேடிச்செல்லும்
வண்டுபோல
ஆவினை நாடி ஓடும்
கன்றுபோல -இறை
ஆலயம் நாடிச்செல்லும்
அன்பர்களே ஹாஜிகளே!

காதல்கொண்ட  காதலர்கள்-தம்
காதலியைத் தேடிச்செல்வர்.
நீங்களோ
இறைவனின் அருளைத் தேடி
இருப்பிடம் துறந்து சென்ற
இறைக்காதலர்கள்.

அன்னம் தேடிச்செல்லும்
அன்றாட விருந்தாளிகள்
அல்ல நீவிர்.
அன்பையும்  அருளையும்
நாடிச் சென்றுள்ள
அல்லாஹ்வின் விருந்தாளிகள்.
வெள்ளாடை அணிந்துகொண்டு
வேற்றுமையைக் களைந்துவிட்டு
ஒற்றுமையாய் ஓரினமாய்
ஓரிறைவன் ஆலயத்தை
ஒவ்வொரு நாளும்
வலம்வரும் நீங்கள்
வல்லோனின் பார்வையில்
நல்லடியார்கள்.

வன்சொல், தீய செயல்
வீண் பேச்சைத் துறந்து
துன்ப துயரங்களை
இன்பமாய்ச் சுகித்துக்கொண்டு
இன்சொல்லையே உரைக்கும் நீவிர்
அன்பாளன் அல்லாஹ்வின்
சமாதானப் புறாக்கள்.

பன்னாட்டு மக்களோடு
பண்பட்ட இதயத்தோடு
படைப்பாளன் அல்லாஹ்-முதலில்
படைத்திட்ட இறையாலயத்தை
கருணையாளன் அல்லாஹ்வின்
கட்டளைக்கேற்ப
சுற்றிச் சுற்றி வந்து
சற்றும் குறையில்லா
புத்தம் புது மானிடராய்
பிறந்தகம் திரும்பிடுவீர்!